மீண்டும் தலைதூக்கியுள்ள மின்வெட்டு பிரச்சனை

   மிழக மக்களை நீண்ட நாட்களாகவே சிரமத்திற்கு உள்ளாக்கி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்னை மீண்டும் பெரிய அளவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.
தவிக்க வைக்கும் மின்வெட்டு : மின்வெட்டுப் பிரச்னையில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை. கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தினமும் 10 மணிநேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் தடைபடுவதால் மக்களின் அவஸ்தை அதிகரித்துள்ளது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவ மாணவிகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துப் பரீட்சை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பெரும் தலை வலியை ஏற்படுத்துகிறது மின்வெட்டு.
தொழில்துறையினருக்கும் பாதிப்பு : மின்வெட்டால் தொழில்துறையினருக்கும் அதிக பாதிப்பு நேரிடுகிறது. இதனால் சிறு தொழில் நடத்துவோர் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
நம்பிக்கை பொய்த்துப்போகக் கூடாது : தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகள்  கூறுகையில் : காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு குறைந்தது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த மின்வெட்டுப் பிரச்னை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடக்கூடாது என்பதுதான் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-சந்திரசேகர்